புதன், ஜனவரி 03, 2018

திரு அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழால் இணைவோம் நூல் பற்றிய கருத்துரை)


Siragu tamil4
தமிழ் உயரிய மொழி செம்மொழி என்ற பெருமைகளை எல்லாவற்றைக் காட்டிலும் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உயிர்மொழி என்ற பெருமையே அதன் சிறப்பும் தேவையும் ஆகும். தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள், உலகெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் தமிழ்மொழி சற்றே ஒட்டிக் கிடக்கிறது. இதனை வலுப்படுத்தாவிட்டால் தமிழ் என்னும் தாய் மொழி தாயாகும் தன்மையை இழந்து வெறும் ஏட்டுமொழியாகிவிடலாம்.
இலங்கை, சிங்கப்பூர் மலேசியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா இன்னும் பற்பல இடங்களில் தமிழர்கள் இன்று தம் மொழியை முன்னிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சிக்கல்களை உற்றுக்கவனிக்க என்ன செய்ய இயலும்?
தமிழகத்திலும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். தமிழகத்தில் சாதி அவர்களைப் பிரிக்கிறது. சாதித் தொகுதிகள் பிரிக்கின்றன. தமிழர்களை ஒருங்கிணைக்க ஒரே வழி தமிழ்தான்.
தமிழைத் தமிழர்தம் ஒற்றுமைக்கான ஒரே தீர்வாகக் காட்டுகிறது அனிதா கு. கிருட்டிணமூர்த்தி அவர்கள் எழுதிய தமிழால் இணைவோம் என்ற நூல். உண்மையிலேயே இதுதான் நூல். ஏனென்றால் தமிழகத்தின் நூல் உற்பத்தித் தளத்தில் இருந்து இந்நூல் உருவாகி இருக்கிறது.
தமிழர்தம் பழமையைப் போற்றிப் பல நூல்கள் செய்யலாம். ஆனால் தமிழரின் இன்றைய நிலையை பற்றிய நூல் எழுதுவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. இதனை மிகக் கவனமாக செய்திருக்கிறார் நூலாசிரியர். அவரின் தமிழர் தொன்மை பற்றிய அறிவு அரசியல் தொடர்பு, தமிழகத்தில் விளைந்த அரசியல்வாதிகளுடனான பழக்கம், உலகத்தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்ட பங்களிப்பு போன்றவற்றால் தமிழரின் இன்றைய நிலையை உரசிப் பார்க்கிறார் அனிதா கிருட்டிணமூர்த்தி.
கீழடியில் தமிழரின் பண்பாடு புதைந்துகிடக்கிறது. அதனைப் புதைத்துவிட விட்டுவிடக் கூடாது என்று குரல் தருகிறார் இந்நூலாசிரியர். தொல்லியல் பகுதியாக இருக்கும் 110 ஏக்கர் நிலத்தை உடனடியாகத் தமிழக அரசு அந்நிலத்தை உரியவருக்கு இழப்பீடு தந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். நாம் என்ன செய்யப்போகிறோம். தமிழரின் வரலாற்றை வைகை நாகரீகத்தைக் கண்டும் காணாமல் அமைதியாய் இருக்கப் போகிறோமா?
ஆரிய பவன் உணவத்தில் சாப்பிட்டிருக்கிறீர்களா? உணவு நன்றாக இருக்குமா? ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால் ஆரியபவனுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் நீங்கள் அறியவில்லை என்பதுதான். மிகத் தெளிவாக இதன் அரசியலை ஆராய்கிறார் நூலசிரியர். கடந்த காலத்தில் அந்தணர்கள் உணவு உண்ணத் தேடும் இடம் பிராமணாள் ஹோட்டல், அல்லது உடுப்பி ஹோட்டல். தற்போது அந்தணர்கள் நம்பிச் சாப்பிடும் இடம் ஆரியபவன். ஆரியர்கள் உணவு உண்பதற்காக ரெட்டியார்கள் ஏற்படுத்திய உணவகம் ஆரிய பவன். அது தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பரவியிருக்கிறது, பரவி வருகிறது.
tamil-mozhi-fi
இதே போல மற்றொன்று அய்யங்கார் பேக்கரி. முட்டை கலந்து செய்யப்படும் கேக் வகைகளுக்கு எதற்கு ஐயங்கார் பேக்கரி என்ற பெயர்?  மேலும் இக்கடைகளில் முட்டை இல்லாமல் உணவுப் பொருட்கள் செய்யப்படுகின்றன என்று யாராலாவது உத்திரவாதம் தரப்பட இயலுமா?
இசுலாமியச் சமயத்தவர்கள் துணிக்கடை வைக்கும்போது பூம்புகார் துணிக்கடை என்று ஏன் வைக்கிறார்கள். அவர்கள் வந்திறங்கிய துறைமுகங்களில் ஒன்று என்பதாலா? தமிழ்நாடு துணிக்கடல் என்று வைக்கும் அவர்கள் உணவகம் வைக்கும்போது மட்டும் ஏன் பிஸ்மில்லா போன்ற பெயர்களைப் பயன்படுத்தி, ஹலால் செய்யப்பட்டது என்று பெயர் வைக்கிறார்கள்.
இது ஒரு  பக்கம் இருக்கட்டும். ஏன் தமிழகத்தின் பிற்பட்ட வகுப்புகளாக வருணிக்கப்படும் இனத்தாரின் பெயர்களில்  உணவகங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது மற்றுமொரு தங்கக் கேள்வி.
இன்றைக்கு ஆசாரிக் கடைகள் மறைந்து முத்துட், கொசமட்டம், மலபார் ஜுவல்லரிகள் தமிழகத்தில் புகுந்துவிட்டன. முதல் தளத்தில் நகைக்கடை, இரண்டாம் தளத்தில் தங்க நகைகளை அடகு வைக்கும் அடகுக்கடை. வாங்கி அடகு வைக்கவேண்டுமா? அல்லது அடகு வைத்து வாங்கவேண்டுமா? விற்பவர்கள் வேற்று மாநிலத்தவர்கள் வாங்குபவர்கள் மட்டும் தமிழகத்தார்கள்.
பால் விற்பனை தெலுங்கரிடம், காய்கறி விற்பனை ரிலையன்ஸ், மால் விற்பனை பிக் பஜார் போன்ற வடநாட்டாரிடத்தில். வாணிகத்தில், வணிகத்தால் பிரிந்து கிடக்கிறது தமிழகம். பிரிந்து கிடந்தாலும் பரவாயில்லை. பொருளாதாரத்தைப் பறிகொடுத்து நிற்கிறது என்பதே உண்மை.
இந்த உண்மையை உரக்கச்சொல்கிறது இந்த நூல்.
தமிழகத்தின் மிக நீண்ட பரப்பினையும் செல்வ வளம் மிக்க இடத்தினையும் தமிழர்கள் இழந்துள்ளாரகள் என்று பல்வகைக் குறிப்புகளுடன் இந்நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். நீர்வளம் மிக்க தமிழகப் பகுதிகள் கர்நாடகத்திற்குத் தாரை வார்க்கப்பட்ட உண்மை ஆசிரியரால் வெளிவருகிறது. திருத்தணியை கன்னியாக்குமரியைக் காப்பாற்ற நடந்த போராட்டங்கள் அவரால் நினைவு கூரப்படுகின்றன. தலைமைச் செயலராக திரு.வர்கீஸ் இருந்த காலத்தில் கேரளப் பகுதிகள் தமிழகத்தில் இருந்துப் பிரித்துத் தரப்பட்டன என்ற கூற்றில் வர்கீஸ் அவர்களின் கேரளப் பற்று தெரியவருகிறது. இந்திய எண்ணம் கொண்ட காமராசர் காலத்தில் தான் இது நடைபெற்றது. இதனை எதிர்க்க தி.முக. அப்போது ஏழு வயது பத்தாது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
உலகத்தமிழ் மாநாடுகள் இனி நடக்குமா? அதனால் பயன் உண்டா? என்ற வினாவை எழுப்பி விடைகாண்கிறார் நூலாசிரியர. தனிநாயகம் அடிகள், அண்ணா ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினர். அண்ணா அவர்கள் கம்பராமாயணத்தை எதிர்த்தபோதும் கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாகவே கண்டு அவருக்குச் சிலை எழுப்பினார். தான் எழுப்பிய கம்பரின்சிலைக்கு அருகிலேயே அவர் இன்று மீளாத்துயில் கொள்வது என்ன பொருத்தம். கம்பன் எடுத்துக்கொண்ட கதை மீதுதான் அண்ணாவிற்கு வெறுப்பு. கவியின் மீதல்ல என்பதற்கு இதுவே சான்று என்பது ஆசிரியரின் கூற்று. மூன்றாம் மாநாடு பாரீசிலும், நான்காம் மாநாடு இலங்கையிலும் நடந்தன. ஐந்தாம் மாநாடு ம.கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களால் நடத்தப்பெற்றது. ஆறாம் மாநாடு கோலாலம்பூரில், ஏழாவது மொரிஷியஸ், எட்டாவது மாநாடு தஞ்சையில் நடத்தப்பெற்றது. இதுவரை உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படாதது பெருத்த இழப்பே. எதிர்கால சந்ததியினர் தமிழின் வலிமையை அறிந்து கொள்ள உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். அதில் அரசியல் வேண்டாம், தமிழ் வேண்டும். அதுவே தமிழரை ஒன்றாக்கும். ஒன்றான தமிழர் கண்டு நம் பகைவர் அஞ்சி ஓடுவர்.
தமிழால் தமிழர்களை இணைத்த சான்றோர்களையும் அவ்வப்போது இந்நூலாசிரியர் பாராட்டுகிறார். ம.பொ.சி, வ.உ.சி, சோமசுந்தர் பாரதி, மகாகவி பாரதி, சண்முகம் செட்டியார், கால்டுவெல் போன்ற பலரை இந்நூலில் முன்னிறுத்துகிறார் நூலாசிரியர். இவர்களை முன்னிறுத்தினால் தமிழர்களுக்குள் ஒற்றுமை வரும். தமிழால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லையெனில் அனைவர்க்கும் தாழ்வே. இதுவே இந்நூலின் நோக்கம். அந்நோக்கத்தை எய்தச் செய்யும் எழுச்சியை இந்நூல் தருகிறது.

கருத்துகள் இல்லை: